Friday, December 2, 2011

மழை: அரேபியக் காரனின் கனவும் ஆர்க்காட்டுக்காரனின் கனவும்!


இரண்டாவது முறையாக தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை தற்போது ஓய்ந்துள்ளது. வெளுத்துக் கட்டும் மழையால் தமிழகத்தில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் நிரம்பினவோ இல்லையோ தொலைக்காட்சிக்காரர்களின் கல்லாப் பெட்டிகள் நிரம்பி வழிகின்றன. எழவு வீட்டிலும் காசு பார்ப்பவர்கள் இந்த மழையை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன? 

முன்பு நொய்யலாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களை பேட்டி கண்ட போதும் சரி; தற்போது சென்னை போன்ற பெரு நகரங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் தங்கள் உடமைகளை இழந்த மக்களை பேட்டி காணும் போதும் சரி இத்தகைய இழப்பிற்கு யார் பொறுப்பு என்பதை மிகக் கவனமாகத் தவிர்த்துவிட்டு மக்களின் அவலங்களைக் காசாக்கிக் கொள்கிறார்கள்.

இயற்கையின் சீற்றமா இல்லை அரசின் குற்றமா?

போதிய நீராதாரம் இல்லாத காரணத்தாலும், விவசாய விலை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காமையாலும்  இனி கிராமங்களில் வாழ்க்கையை ஓட்ட முடியாது என்பதனால் கிராம மக்கள் அணி அணியாக நகரங்களுக்குப் படை எடுக்கிறார்கள். கட்டின துணியோடு நகரங்களைச் சென்றடையும் இம்மக்கள் எங்கே தங்குவார்கள்? இவர்களுக்கு முன்பே நகரங்களுக்கு வந்து கிடைக்கின்ற வேலைகளைச் செய்து அவற்றில் கிடைத்த கொஞ்சம் காசில் வயிற்றிற்குப் போக மீதியை மிச்சப்படுத்தி ஏரி ஓரங்களிலும் ஆற்றுப் படுகைகளிலும் குடிசைகளை அமைத்துக் கொண்டு வசிக்கும் தங்கள் தூரத்து உறவினர்கள் அல்லது நண்பர்களின் வசிப்பிடங்களில் புதிதாய் வந்தவர்கள் சில நாட்கள் தங்குகிறார்கள். நான்கு பேர் உட்காரவே முடியாத இத்தகைய ‘வசிப்பிடங்களில்’ எத்தனை நாட்களுக்குத்தான் தங்க முடியும்? பிறகு இவர்களும் அதே பாணியில் ‘வசிப்பிடங்களை’ அமைத்துக் கொள்கின்றனர்.

இப்படிக் குடிசைகளை அமைத்துக் கொள்வதும் அவ்வளவு சுலபமானதல்ல. அரசியல் வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால்தான் இதுவும் சாத்தியம். அதன் பிறகு மின் இணைப்பும், குடும்ப அட்டைகளும், வாக்காளர் அட்டைகளும் கிடைக்க வேண்டுமா? அதற்காகத்தானே அரிப்பெடுத்த கைகளோடு அதிகாரிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ரூபாய்த் தாள்கள் அவர்களின் கைகளை உரசினால் போதும் அவர்களின் அரிப்பும் நின்று போகும். மக்களுக்கு கிடைக்க வேண்டியதும் கிடைத்துவிடும். வாழ்வதற்குத் தேவையான சட்டப்படியான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாகக் கருதிதான் குடிசைவாசிகள் அவ்விடத்தில் காலத்தைத் தள்ளுகிறார்கள்.

அரசியல்வாதிகள் அதிகாரிகள் ஆசியோடு ஆறுகளிலும் ஏரிகளிலும் வீடுகள் புகுந்து விடுகின்றன. பிறகு மழைக் காலங்களில் இத்தகைய வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து விடுகிறது. இது மழையைப் பொய்வித்த ‘வருண பகவானின்’ குற்றமா? இல்லை ஆறுகளையும் ஏரிகளையும் ஆக்கிரமித்து ‘வீடுகுள்’ கட்டிக்கொண்டது ஏழைகளின் குற்றமா? அல்லது பிழைப்பு தேடி நகரங்களில் குடியேறுபவர்களுக்கு முறையான வசிப்பிடங்களை ஏற்பாடு செய்யாமல் ஆறுகளிலும் ஏரிகளிலும் குடிசைகள் அமைத்துக் கொள்வதற்கு தங்கள் பைகளை நிரப்பிக் கொண்டு அவற்றிற்கு துணைபோகும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் குற்றமா?

ஒரு நாள் பிழைப்பா இல்லை ஓர் ஆண்டு வாழ்வா?

“வேலைக்குச் செல்ல முடியவில்லை,  பால்காரன், பேப்பர்காரன் வரவில்லை,  போக்குவரத்து நெரிசல், ரொம்ப கஷ்டமா இருக்கு”  என மண்ணையே மிதிக்காத மகிழுந்துக்காரர்களின் (car) பேட்டியும், நடுத்தர மற்றும் மேட்டுக்குடி மக்களின் அங்கலாய்ப்பும்-சலிப்பும் நிறைந்த பேட்டிகள் மற்றொரு பக்கம். ஒரு நாள் செய்தித்தாள் படிக்கவில்லை என்றாலோ அல்லது டீ, காபி குடிக்கவில்லை என்றாலோ குடியா முழுகிப் போய்விடும்?

இவை எல்லாம் தொலைக் காட்சிக்காரனுக்கு முக்கியச் செயத்திகளாகி விடுகின்றன. “சைதாப்பேட்டையிலிருந்து எமது செய்தியாளர் என்ன கூறுகிறார் பார்ப்போம்” என இதில் ‘லைவ்’ வேற!

ஒரு நாள் மழைக்கு இன்றைய பொழப்பு போச்சே என்பது இவர்களின் கவலை. ஆனால் இந்த ஒரு நாள் மழை இல்லை என்றால் எம் உழவனுக்கு ஓர் ஆண்டல்லாவா பொழப்பு போகிறது!

“ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் தொடரும் கன மழையால் சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதி; குற்றாலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக குளிக்கத் தடை,  பயணிகள் ஏமாற்றம்” என செய்தி ஒருபக்கம். “ரொம்ப ஏமாற்றமாயிடுச்சு. மழை விடாம பெய்யுது. அதனால “டூர் வந்தும் எதையும் எஞ்சாய் பண்ண முடியாமப் போச்சு” என நடுத்தர மக்களின் பேட்டி மற்றொரு பக்கம்.

மழை என்னமோ ஒன்றுதான். நகர்ப்புறங்களில் வீடுகளை இழந்து பேட்டியளிக்கும் மக்களின் அவலம் ஒருபக்கம் ‘எஞ்சாய் பண்ண முடியாமப் போச்சு’ என்கிற நடுத்தர வர்க்கத்தின் ‘கவலை’ மறுபக்கம் என இரு வேறு விளைவுகள்.

தமிழகத்தில் மழை அதிகமா?

”தமிழகத்தில் அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரு மாதங்களில் மட்டும் இதுவரை பெய்துள்ள மழையின் அளவு 450 மில்லிமீட்டர். அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரையிலான 3 மாத காலத்தில் சராசரி மழை அளவு 430 மில்லிமீட்டர். மேலும் டிசம்பர் முழுக்க மழை பெய்ய வாய்ப்புகளுண்டு. இனி பெய்கின்ற மழை உபரிதான்” இப்படி பேட்டியளிக்கிறார் வானிலை ஆய்வு மைய அதிகாரி இரமணன்.

வாலாஜா, ஆர்க்காடு, இராணிப்பேட்டை, வேலூர், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், அரூர், செங்கம், திருவண்ணாமலை, போளூர், ஆரணி, வந்தவாசி, செய்யாறு, பகுதிகளை உள்ளடக்கிய வேலூர்-கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம்-திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் தமிழகத்தில்தான் உள்ளனவா என இரமணனின் பேட்டியை கேட்ட பிறகு எனக்குள் ஒரு ஐயம் ஏற்பட்டுவிட்டது. 27.11.2011 அன்று பருகூரில் ஒரு திருமணத்திற்குச் சென்றுவிட்டு வரும் வழியில் மழையின் ‘பாதிப்பை’ பார்த்த பிறகுதான் இந்த இடுகையை எழுதுகிறேன்.

கடந்த இரண்டு மாதங்களில் மேற் கூறிய பெரும்பாலான ஊர்களுக்குச் சென்று வந்துள்ளேன்; சென்று வந்தவர்களைக் கேட்டுள்ளேன்; தொலைபேசி மூலம் விசாரித்து அறிந்துள்ளேன். இப்பகுதிகளில் உள்ள ஏரிகள் கால் பங்குகூட நிறையவில்லை; சில ஏரிகளில் சொட்டுத் தண்ணீர் கூட இல்லை; சாலையோரக் குழிகளில் ‘குண்டி கழுவக்’ கூட தண்ணீரைக் காணோம். விதிவிலக்காக இப்பகுதிகளில் ஒரு சில ஏரிகள் நிரம்பிருக்கலாம்;  ஒரு சில சிற்றோடைகளில் சிறிதளவு வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் ஒட்டு மொத்தத்தில் இப்பகுதிகளில் இனியும் வலுவான மழை வரவில்லை என்றால் இந்த ஆண்டு குடி நீருக்கே பஞ்சம் வரும் என்பதே நிதர்சனம்.

“தமிழகம் முழுவதும் மழை கொட்டித் தீர்த்தும் வேலூர் மாவட்டத்தில் வறண்டு கிடக்கும் ஏரிகள்”  என்று 28.11.2011  தேதியில் தினமணி நாளேடும் இதை உறுதிப்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் இதுதான் நிலைமை என்பதை மறுநாள் அதே தினமணியில் செய்தி வெளியாகி உள்ளது.

ஆர்க்காட்டுக்காரனின் கனவு நனவாகுமா?

பாலாற்றிலும், பொன்னையாற்றிலும் தண்ணீரைப் பார்ப்பது அரிது.-ஆந்திராவிலிருந்து பொன்னை-திருவலம் வழியாக ஆர்க்காடு அருகே பாலாற்றில் இணையும் ஓர் ஆறுதான் பொன்னை ஆறு. தண்ணீர் ஓடினால்தானே ‘கலக்கும்’ ஆறு என சொல்ல முடியும். பாலாற்றிலும், பொன்னையாற்றிலும் வெள்ளப் பெருக்கை கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இரு முறைதான் இப்பகுதி மக்கள் பார்த்திருக்கிறார்கள். கடைசியாகப் பார்த்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. கல்லூரிச் சாலையில் குளு குளு அறைக்குள் அமர்ந்து கொண்டு ‘இந்த ஆண்டு தமிழகத்தில் சராசரியை விட மழை அதிகம்,  இனி பெய்வதெல்லாம் உபரிதான்’ என பேட்டியளிக்கும் இரமணனுக்கு, அரேபியக் காரனின் கனவும் ஆர்க்காட்டுக்காரனின் கனவும் ஒன்றுதான் என்பது எப்படித் தெரியும்?

3 comments:

  1. அரேபியக் காரனின் கனவும் ஆர்க்காட்டுக்காரனின் கனவும் ஒன்றுதான் என்பது எப்படித் தெரியும்?.இந்தியனுக்கு அதுவும் மேட்டுக்குடி தமிழனுக்கு நிச்சயமாக தெரியாதுங்க.

    ReplyDelete
  2. ரமணன் சொல்வதெல்லாம் உளரல்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை. மழை வரும் என்றால் வராது. வராது என்றால் வரும். தெளிவில்லாத வானிலை அறிக்கை - நம்ம டெக்னாலஜி அப்படி. போதுமான மழை பெய்துவிட்டது, இனிமேல் பெய்வது உபரி என்பது தெளிவில்லாத குடிகாரன் போன்ற பேச்சு - ரமணனுடையது. மைக்கை நீட்டிவிட்டால், உற்சாகம் பொங்கி, எதையாவது உளறிக்கொட்டுவது! இவர்களின் அறிக்கை என்பது நகரவாசிகள் மழையில் நனையக்கூடாது என்பதின் அக்கறை! ஏரி, குளங்களைப் பற்றி அவருகென்ன கவலை?

    ReplyDelete