Monday, November 21, 2011

கூடங்குளம்: 'மம்மி' நாயகன் வருவானா?

பொதுவாக வெளியூர் பயணம் சென்றால் அவ்வூர் எதற்குப் பெயர் பெற்றது என்பதை அறிந்து அதை வாங்கி வந்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பது இன்றும் நம் வழக்கத்தில் உள்ள ஒன்று. திருநெல்வேலி அல்வா என்றாலே 'பாவ்லோ' கூற்றுப்படி நாவில் ஊறும் எச்சிலை யாரால்தான் நிறுத்தமுடியும்? 

திருவில்லிபுத்தூர் பால்கோவா, நாக்பூர் சோன்பப்டி, லோனேவாலா கடலை மிட்டாய், கிருஷ்ணன் கோவில் கொய்யா, ஆக்ரா பூசனிக்காய் அல்வா, நாக்பூர் ஆரஞ்சு, திண்டுக்கல் பன்னீர் திராட்சை, சந்தவாசல் வாழைப்பழம், திருப்பதி லட்டு, சேலம் மாம்பழம், பன்ருட்டி பலா, மணப்பாறை முருக்கு, ஊட்டி வறிக்கி, அய்தராபாத் பேப்பர் ஸ்வீட், சிம்லா ஆப்பிள், கொல்லிமலை அண்ணாசி, கொடைக்கானல் பேரிக்காய் என இவற்றிற்கு இவ்வூர்கள் புகழ் பெற்றுள்ளதால் அவ்வூர்களுக்குச் சென்று வெறுங்கையோடு திரும்ப முடியுமா? என்னப்பா திருநெல்வேலிக்குப் போயிட்டு அல்வா வாங்காம சும்மா வந்திட்டியே என உறவினர்களும் நண்பர்களும் கேட்காமல் விட மாட்டார்கள். 

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் முதன் முறையாக இராசபாளையம் சென்றிருந்தேன். இராசபாளையம் நாய் புகழ் பெற்றது என்பதால் அதையா வாங்கி வரமுடியும்? பேருந்து நிலையத்துக்கு எதிரில் ஒரு இனிப்புக் கடையைப் பார்த்தேன். விறகு மிலார்களைப் போல குவிக்கப்படிருந்த காராசேவும், ஆள் உயரத்துக்கு சுருட்டி அடுக்கப்பட்டிருந்த வெள்ளை நிற தேன்மிட்டாயும் என்னை மிகவும் கவர்ந்தன. இந்த ஊரின் சிறப்பு என்னவென்று வினவினேன். தேன்மிட்டாய் என்றார்கள்.  விலையோ மிகக் குறைவு. ஒரு கிலோ முப்பது ரூபாய்க்கும் குறைவுதான். ஒரு கிலோ வேண்டும் என்றேன். உடனே பெரிய பனை ஓலைக் கூடை ஒன்றை எடுத்தார்கள். எடை போட்டபிறகு தேன்மிட்டாயை பக்குவமாய் கூடைக்குள் அடைத்தார்கள். என் கையிலோ கூடுதலாக இன்னுமொரு சுமை என்றாலும் புதிதாய் ஒரு தின்பண்டத்தை வாங்கிச் செல்கிற மகிழ்ச்சியில் அது சுமையாகத் தெரியவில்லை. கூடவே சொஞ்சம் மிலார்களையும், தேன் குழலும் வாங்கிக் கொண்டேன். திருச்சிக்குத் திரும்பி வரும் போது, வரும் வழியில் திருவில்லிபுத்தூர் பால்கோவாவையும், கிருஷ்ணன் கோவில் கொய்யாவையும் வாங்கிக் கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. இருக்காதா பின்ன! ஒரே நேரத்தில் மூன்று சிறப்புகளையும் வாங்கிவிட்டேனே!

'பாலிதின் கேரி பேக்'

அப்படி வாங்கிய பொருள் எதற்கும் அன்று 'கேரிபேக்' இல்லை என்பது மற்றுமொரு சிறப்பு. ஆனால் இன்று ஐந்து ரூபாய்க்கு 'ஐஸ்கிரீம்' வாங்கினாலும் அதற்கும் ஒரு பாலிதின் கேரி பேக். இப்படி எதற்கெடுத்தாலும் கேரிபேக் என எங்கும் குவிந்துவிட்டதால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் கேட்டை விளக்க வேண்டிய அவசியமில்லை. அன்று தேன்மிட்டாய் ஒழுகி துணியெல்லாம் பாழாகிவிடுமோ என அச்சப்பட்டேன். அது உடனடி பாதிப்பு என்றாலும் துணியை துவைத்த பிறகு பாதிப்புக்கு முடிவு ஏற்பட்டு விட்டது. ஆனால் இன்று பாலிதின் கேரிபேக்குகளில் அடைத்துக் கொடுப்பதால் உடனடி பாதிப்பு ஏதும் இல்லை. பாதுகாப்பாக பொருளை எடுத்து வருகிறோம். ஆனால் பாலிதின் கேரிபேக்குகளால் ஏற்படும் எதிர்கால பாதிப்பு மனித குலத்திற்கே சவாலாய் உருவெடுத்து வருகிறது. அதனால்தான் கேரிபேக்குகளை தடை செய்ய வேண்டும் எனக் குரல் கொடுக்கிறோம்.

பல்வேறு நச்சு ஆலைகளால் பலருக்கு உடனடி வேலை வாய்ப்புகள் கிடைத்தன-கிடைக்கின்றன. ஆனால் அவற்றால் ஏற்படும் எதிர்கால பாதிப்பு சுற்று வட்டாரத்தையே வாழ இலாயக்கற்றதாக மாற்றிவருகிறது. பிரிட்ஜ் உள்ளிட்ட சில சொகுசுப் பொருட்கள் இன்று நமக்கு உடனடி சுகத்தை அளிக்கின்ற அதேவேளையில் ஓசோன் மண்டலத்தை ஓட்டையாக்கும் மீத்தேன் வாயுவை வெளியேற்றுவதால் அவற்றைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டும் என்கிறோம். ஏன்? ஓசோன் ஓட்டையாகிவிட்டால் எதிர்காலத்தில் மனித இனம் வாழ இலாயக்கற்றதாக இப்புவி மாறி விடும் என்பதால் புவி வெப்பமயமாவதிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்கிறோம்.

'மம்மி' நாயகன் வருவானா?

உடனடித் தேவையா அல்லது எதிர்காலப் பாதுகாப்பா? எது முதன்மையானது என்று பரிசீலித்தால் மனித குலத்தைக் காக்க வேண்டும் எனில் மேற்கண்ட கோரிக்கைகள் நியாயமானதே. இப்படித்தானே கூடங்குளத்தையும் பார்க்க வேண்டும்.

மின்சாரம் நமக்குத் தேவைதான்.மறுப்பதற்கில்லை.அதற்கு மாற்று வழிகளைத்தான் தேட வேண்டும். ஒரு முப்பது ஆண்டு காலத்திற்கோ அல்லது நாற்பதாண்டு காலத்திற்கோ கூடங்குளம் அணு உலை மின்சாரத்தைக் கொடுக்கும். அதுவரை பூகம்பமோ அல்லது சுனாமியோ வராது என்றே நம்புவோம். ஆனால் நாற்பதாண்டுகள் கழித்து ஆலையில் வேலைசெய்த ஊழியர்களும் அதிகாரிகளும் இலட்சங்களைச் சம்பாதித்துக் கொண்டு வேறு ஊர்களுக்குச் சென்று 'செட்டில்' ஆகிவிடுவார்கள்.  ஆனால் கூடங்குளம் மக்கள் எங்கே செல்வார்கள்?

புதைக்கப்பட்ட மனிதன் ஒருமுறையோ அல்லது அதிகப்படியாக மூன்று முறையோதான் 'உயிர்த்தெழுவான்'. இது சமய நம்பிக்கை. கூடங்குளத்தில் நியூட்ரான் என்கிற எமனை இன்று வேண்டுமானால் நான்கு சுவற்றுக்குள் அடைத்து வைக்கலாம் அல்லது எமனை அடக்க மாடரேட்டர்களை ஏவலாம். ஆனால் புதைக்கப்ட்ட பிறகு ஒரு முறையல்ல, ஓராயிரம் முறையல்ல, ஒன்று-இரண்டாய்,இரண்டு-நான்காய்,நான்கு-பதினாறாய், பதினாறு-இருநூற்று ஐம்பத்தாறாய்,இருநூற்று ஐம்பத்தாறு-அறுபத்தைந்தாயிரத்து ஐநூற்று முப்பத்தாறாய்.... எனப் பல்கிப் பெருகி கோடி கோடியாய் உயிர்த்தெழப் போகும் நியூட்ரான் எமன்களை விழுங்க அன்று மாடரேட்டர்கள் இருக்கமாட்டார்கள். இத்துக் கொண்டு வரும் சுவற்றின் ஓட்டைகளைக் கிழித்துக் கொண்டு வெளியேறப் போகும் நியூட்ரான் எமன்களை வெட்டி வீச 'மம்மி' நாயகன் வரப்போவதில்லை?

கோடிக்கணக்கில் உயிர்த்தெழப் போகும் நியூட்ரான் எமன்களை எதிர்கொள்வதா அல்லது அவற்றைக் கருவிலேயே அழிப்பதா என்பதே கூடங்குளம் மக்களின் இன்றைய போராட்டம்.

4 comments:

  1. எப்படி எப்படியோ கேக்கிறோம்.. இன்று தமிழகம் முழுவதும் பேசப் படும் பொருளாக கூடங்குளம் உருவாகி இருப்பதே பெரிய விஷயம்... நாளை திருவண்ணாமலையில் மனித உரிமை அமைப்பு ஒன்று ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறதாம்... நேரம் கிடைத்தால் புகைப்படங்களுடன் அந்த நிகழ்வை ஒரு பதிவாக போடுகிறேன்

    ReplyDelete
  2. கோரிக்கையில் நியாயம் இருப்பின் அதை மக்களிடம் கொண்டு செல்வது சரிதானே! தங்களின் பதிவை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. //நாற்பதாண்டுகள் கழித்து ஆலையில் வேலைசெய்த ஊழியர்களும் அதிகாரிகளும் இலட்சங்களைச் சம்பாதித்துக் கொண்டு வேறு ஊர்களுக்குச் சென்று 'செட்டில்' ஆகிவிடுவார்கள். ஆனால் கூடங்குளம் மக்கள் எங்கே செல்வார்கள்?//

    உண்மைதான். இயற்கையோடு இணைந்த வாழ்வுதான் நம்மை, நமது சந்ததியினைரை நல் வழியில் இட்டு செல்லும். விஞ்ஞானத்தின் துணைக் கொண்டு செய்யும் எந்த செயலும் மனித குலத்தை அழிவுப் பாதைக்குத்தான் கொண்டு செல்லும்.

    காலத்திற்கேற்ற நல்ல பதிவு.

    ReplyDelete
  4. சரளமான நடை. நல்ல பதிவு தோழர். சில நாட்களுக்கு முன்பே படித்துவிட்டேன். சொல்லவேண்டும் என நினைத்து தாமதமாகிவிட்டது.

    ReplyDelete