Monday, October 17, 2011

"குவார்ட்டர் கட்டிங்"

இது பருவ மழைக்காலம். இந்நேரம் தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியிருக்கவேண்டும். பருவ மழை ஏன் தாமதமாகிறது என்பதைக் கண்டறிய சென்னை வானிலை ஆய்வுமைய விஞ்ஞானிகள் ரமணன் தலைமையில் தீவிர ஆய்வில் ஈடுபட்டிருப்பதாகக் கேள்வி.

கடந்த பத்து நாட்களாக வேறு ஒரு புயல் தமிழகத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மையம் கொண்டிருக்கிறது. இந்தப்புயல் நீடிக்கும் வரை வங்கக்கடலில் வேறு ஒரு புயல் உருவாக முடியாது என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை மேலும் தீவிரமடைந்துள்ளது. இது வருகிற பத்தொன்பதாம் தேதி மாலைவரை நீடிக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதுவரை தமிழகத்தில் மிகப் பரவலாக அடிதடி இடியுடன் கூடிய கனமழை மற்றும் வெட்டுக் குத்துடன் கூடிய சூறாவளியாக நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாகப் புயல் மழை என்றால் ஏரி குளங்கள் நிறையும்; இந்தப்புயல் தண்ணீரை வானத்திலிருந்து நேரடியாகக் கொட்டாமல் பாட்டில்களில் அடைத்துக் கொடுப்பதால் தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களாக ஒருசிலருக்கு மட்டுமே கிடைத்துவந்த புயல் தண்ணி இன்று ஆண்மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் பரவலாக பாட்டில்களாக வீசப்பட்டு வருகிறது. 

பாட்டில்களில் இருக்கும் இந்தத் தண்ணியை பெண்கள் விரும்புவதில்லை. அதனால்தான் என்னவோ அதை ஈடுகட்டும் வகையில் தேர்தல் பகவான் கருணையால் இந்தப்புயலில் நோட்டுக் கட்டுகளும், பரிசுப் பொருட்களும் சூறாவளிக் காற்றில் அடித்துவரப்பட்டு வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் தாய்மார்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பதாக மாவட்டங்களிலிருந்து வரும் செய்திகள் மூலம் அறிய முடிகிறது. இது பற்றி வேலூரிலிருந்து நமது நிருபர் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்போம். 

மகிழ்ச்சியில் மக்கள்

”வணக்கம் ஊரான் அவர்களே! புயல் பலமாகவும் அதே நேரத்தில் நிதானமாகவும் வீசி வருகிறது. குடம்-குடை-தட்டு-மூக்குத்தி-சேலை-ஜாக்கெட் என வகை வகையான பொருட்கள் ஒருபுறம்;   ஐம்பது, நூறு, ஐநூறு, ஆயிரம் என காதித நோட்டுகள்-அதுவும் 'கவர்களில்' அடைக்கப்பட்டு பாதுகாப்பாக வீட்டுக்கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது. பெண்கள் ஏக 'குஷியில்' இருக்கிறார்கள். இவை எல்லாம் வீட்டுக்குள்ளேயே விழுவதால் வெளியில் இருக்கும் ஆண்களுக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. ஆண்கள் வெளியில் ஏக்கத்ததோடு வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஏக்கத்தோடு காத்திருக்கும் ஆண்களுக்காவே நேற்று ஒரே நாளில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் ரூபாய் ஒன்பது கோடி மதிப்பிலான பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணி,புயலில் அடித்துவரப்பட்டு ஆங்காங்கே வீசப்பட்டுள்ளதாக பத்திரிக்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக மொத்தத்தில் இந்தப் புயல் ஆண்-பெண் இருபாலரையும் மகிழ்சியில் ஆழ்த்தியுள்ளது. ஊரான் செய்திகளுக்காக வேலூரிலிருந்து சம்புவராயன்."

"நன்றி சம்புவராயன் அவர்களே!"

இனி புயலின் சேதாரம் குறித்து பார்ப்போம்.

பொதுவாகப் புயல் என்றால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். வீடுகளுக்கும் பயிர்களுக்கும் சேதாரம் ஏற்படும்; ஆடுமாடுகள அடித்துச் செல்லப்படுவதோடு மனித உயிர் இழப்புகளும் ஏற்படும். 

புயல் நிதானமாக இருக்கும் அதே வேளையில் பலமாக இருப்பதால் ஒருசில இடங்களில் சேதாரங்களும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சேதாரத்தின் விவரங்கள் முழுமையாகக் கிடக்கவில்லை என்றாலும் பாட்டில்களை கைப்பற்றும் போது ஏற்பட்ட மோதல்களால் பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாவும், பாட்டில் தண்ணியை வயிறுமுட்டக் குடித்ததால் நிலை தடுமாறி கீழு விழுந்து மண்டை உடைபட்டு சிலர் படுகாயம் அடைந்ததாகவும், மண்டையில் அடிபட்ட ஒருசிலர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்து போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பிரியாணி பொட்டலங்களும் புயலில் அடித்துவரப்பட்டதால் புயல் மழையில் சிக்கியோருக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொட்டலம் வீச வேண்டிய தேவை இம்முறை ஏற்படவில்லை என்பது அரசாங்கத்துக்கு ஆறுதலான செய்தி.

நேர்த்திக்கடன்

பொதுவாக புயல் மழையால் ஏரி குளங்கள் நிரம்பி நிலத்தடி நீரும் உயர்ந்தால் அனைவருக்கும் நல்லதுதானே. அதனால் வருணபகவானுக்கு படையல் போட்டு நேர்த்திக்கடன் செலுத்துவது நம் மக்களின் வழக்கம். அதே போன்று நேற்று இரவு கொட்டித் தீர்த்த பரிசு மழை நல்ல பலனைக் கொடுத்ததால் இன்று காலை முதல் மக்கள் சாரி சாரியாகச் சென்று மழைக்குக் காரணமான கடவுள்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றர்.  

மழையைக் கொடுத்தது ஒரே ஒரு கடவுளாய் இருந்தால் நேர்த்திக்கடன் செலுத்துவதில் போட்டி இருக்காது. ஆனால் தற்போதைய மழைக்கு சூரிய பகவான், இரட்டையிலையம்மன், மாங்கனிச்சாமி, முரசையாண்டி, தாமரைக் கண்ணன், பம்பரக் கிருஷ்ணன், அருவாச்சாமி என பிரபல சாமிகளும்; கத்தரிக்கோலன், சாவி முண்டேஸ்வரி, பூட்டு எல்லம்மா, சீப்புவேலன் என பல நூறு வட்டார தெய்வங்களும் இந்த மழைக்குக் காரணமாய் இருப்பதால் நேர்த்திக்கடன் செலுத்தும் இடங்களில் சலசலப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த சலசலப்புக்கு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினாலும் நேர்த்திக்கடன் என்னமோ பெரும்பாலும் அமைதியாகவே நடைபெற்று வருகிறது.

இந்தப் புயல் மேலும் நீடிக்கும் என்பதால் தமிழகத்தின் வேறு சில இடங்களில் நாளை இரவும் பரிசு மழை கொட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரிசு மழைக்கான நேர்த்திக்கடன் நாளை மறுநாள் செலுத்தப்படும். புயல் கொடுத்த பரிசு மழையில் மெய்மறந்து நேர்த்திக்கடன் செலுத்த வந்தவர்கள் ஏனோ பின்கதவை மூடி தாழ்ப்பால் போட மறந்துவிட்டார்கள். இன்று வாரிக் கொடுத்த தெய்வங்கள் நாளை வாரிச் செல்ல இதுதான் வழியோ!

பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் இந்தப் புயலுக்கு என்ன பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிய சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ரமணனைக் கேட்டபோது இந்தப் புயலுக்கு "குவார்ட்டர் கட்டிங்” என பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

6 comments:

  1. என்னது இந்தப் புயலுக்கு குவார்ட்டர் கட்டிங்கா பொருத்தமாகத்தான் இருக்கிறது

    ReplyDelete
  2. நன்றாக இருந்தது..எல்லாமே மிகவும் அவசியமான தகவல்கள். நான் spicytec.com எனும் ஆங்கில ப்ளாக் ஐ நடாத்தி வருகிறேன். தமிழும் அதை பிரபல்யப் படுத்த முயற்சி செய்கிறேன். "தமிழில் தொளினுட்பம்" எனும் தலைப்பில் http://tamilspicytec.blogspot.com/ எனும் ப்ளாக் ஐ ஆரம்பித்து உள்ளேன். உங்களது ஆதரவை எதிர் பார்க்கிறேன். நன்றி..

    ReplyDelete
  3. பேர் பொருத்தம் நல்லாயிருக்கு,

    ReplyDelete