Sunday, October 16, 2011

மீண்டும் பன்றிகளின் படையெடுப்பு!

தமிழக உள்ளாட்சித் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் கடைசி நேரத்தில் இந்த இடுகையை எழுதுகிறேன். மிக விரிவாக பரிசீலிக்கப்பட வேண்டிய ஒரு தேர்தல். உறவினரின் உடல் நலக் குறைவு; அதற்காக கடந்த பத்து நாட்களாக மருத்துவமனையிலேயே உழன்று கொண்டிருந்ததால் இத்தேர்தல் குறித்து மக்களின் கருத்துக்களையும் வேட்பாளர்களின் வாக்குறுதி மற்றும் நடவடிக்கைகளையும் அதிகமாக கவனிக்க முடியவில்லை. எனினும் கிடைத்த தகவல்களைக் கொண்டு இந்த இடுகையை எழுதுகிறேன்.
**********************************************************************************
உள்ளாட்சித் தேர்தல் என்றாலே சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் தொடக்கப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது நடைபெற்ற எமது கிராமத் தலைவருக்கான தேர்தல்தான் எனக்கு முதலில் நினைவுக்கு வருகிறது. அப்பொழுது இரண்டு கிராமங்களும் ஒரே ஊராட்சியின் கீழ் இருந்ததால் ஒரே தலைவர்தான். முதன் முதலில் இருவேறு சாதிகள் மோதிக்கொண்ட அந்த நிகழ்வு எனது நினைவிலிருந்து இன்னும் நீங்கிவிடவில்லை. வாக்கு எண்ணிய கிராமத்திலிருந்த தோற்றுப்போன வேட்பாளரின் சாதியினர் வெற்றிபெற்ற வேட்பாளரின் சாதியினரை விரட்டி விரட்டி அடித்தனர். சாதி பலத்தை நிறுவுவதற்கான ஒரு தேர்தல்தான் உள்ளாட்சித் தேர்தல் என்றால் அது மிகையாகாது என்றே கருதுகிறேன். இன்றும் நிலைமை ஒன்றும் மாறிவிடவில்லை. அதே சாதி வெறியோடுதான் தற்போதைய உள்ளாட்சித் தேர்தலிலும் களம் காண்கிறார்கள் வேட்பாளர்கள்.

ஒரு ஊரில், ஒரேசாதியினர் இருந்தாலும் அங்கேயும் கடுமையான போட்டி நிலவுகிறது. அதற்குக் காரணம் 'நீயா? நானா?' என்கிற பதவிப் போட்டிதான். இருநூறு வாக்குகளை மட்டுமே கொண்ட ஒரு ஊராட்சி உறுப்பினருக்கானத் தேர்தலில் எனது தங்கை மகள் போட்டியிடுகிறார். அதே பதவிக்கு அவருடைய பங்காளி ஒருவரும் நிற்கிறார். வெற்றி பெறமுடியாது எனத் தெரிந்த பிறகு எனது தங்கை மகளிடம் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளச் சொல்லி அழுது மன்றாடுகிறார்களாம் அவரது பங்காளிகள். எனது தங்கை மருமகனோ வசதி குறைவு என்றாலும் தனது மனைவியை வார்டு உறுப்பினராக்கியேத் தீரவேண்டும் என்பதற்காக தலைக்கு ரூபாய் ஐம்பது வீதம் ரூபாய் பத்தாயிரம் வரை செலவு செய்யவும் தயாராய் இருக்கிறாராம். இப்படித் தங்களது கௌரவத்தை நிலைநாட்டுவதற்காகவும் சிலர் களத்தில் நிற்கின்றனர்.

சாதிபலம் மற்றும் கௌரவத்தை நிலைநாட்டத்தான் போட்டியிடுகிறோம் என்று எந்த வேட்பாளரும் வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்வதில்லை. மாறாக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எதைச் சொன்னார்களோ அதைத்தான் இப்பொழுதும் சொல்கிறார்கள். குடிநீர், சுகாதாரம், சாலை- போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும்; குடும்ப அட்டை, முதியோர் பென்சன், சாதி - பிறப்பு - இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட வசதிகளை சுலபமாகப் பெறவும் தனக்கு வாக்களிக்க வேண்டும் என வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரிக்கின்றர்.

எனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்தால் நானே நிர்வாகம் செய்வேன். எனது கணவர் எனது நிர்வாகத்தில் தலையிட மாட்டார் என சில பெண் வேட்பாளர்கள் வாக்குறுதி அளித்துள்ளார்கள். பெண்களுக்கென இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும் ஆண்களின் ஆதிக்கம்தான் நிலவுகிறது என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறேன்.

புரட்டாசியில் 'பொன் உருகக்காயும் மண் உருகப் பெய்யும்' என்பார்கள். ஆனால் இந்த ஆண்டு பொன் உருகக் காய்கிறது. ஆனால் மண் உருகப் பெய்யத்தான் காணோம். வார்டு உறுப்பினர், ஊராட்சித்தலைவர், ஒன்றியக்கவுன்சிலர், மாவட்டக்கவுன்சிலர், நகராட்சி - மாநகராட்சி உறுப்பினர்கள், மேயர்கள் என பதவிகளோ ஏராளம். கட்சிகள் தனித்தனியாக நிற்பதால் வேட்பாளர்களும் ஏராளம். எனவே மக்கள் காட்டில் ஒரே பண மழையும் பரிசு மழையும் மாறி மாறிப் பொழிகிறதே. பிறகு புரட்டாசியில் பெய்தால் என்ன? பொய்த்தால் என்ன?

இந்த உள்ளாட்சித் தேர்தல்களால் பெரிதாக எதுவும் மாறிவிடப்போவதில்லை என்பதை மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். அதனால்தான் கொடுப்பதை வாங்கிக் கொள்வோம் என தாங்கள் கறைபடிகிறோம் என்பதை அறிந்தே கூசாமல் கை நீட்டுகிறார்கள். அனைவரையும் ஊழல்படுத்துவதைத் தவிர இந்தத் தேர்தல் வேறெதையும் சாதிக்கப் போவதில்லை.

வாசகர்கள் அவசியம் மறுவாசிப்புச் செய்ய வேண்டிய பதிவுகள்:

1 comment: