Monday, June 20, 2011

கொடுமைக்கு ஆளாவது மருமகள்களா அல்லது முதியோர்களா?

"முதியோரை கொடுமைப்படுத்துவதில் மருமகள்களுக்கே முதலிடம்!
கொல்கத்தா, ஜூன் 15: வீட்டிலுள்ள முதியோர்களுக்கு ஏற்படும் கொடுமைகளுக்கு பெரும்பாலும் அவர்களுடைய மருமகள்களே காரணம் என்பது ஹெல்பேஜ் இந்தியா என்ற தன்னார்வ அமைப்பின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 9 கோடி பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய மருமகள் அல்லது மகன்களால் கொடுமைக்கு ஆளாகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளில் தங்களுக்கு எதிரான கொடுமை அதிகரித்திருப்பதாக 41 சதவீத முதியோர் தெரிவித்துள்ளனர். தாங்கள் மென்மையான இலக்காக இருப்பதே இதற்குக் காரணம் எனவும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் கொடுமைக்கு ஆளான முதியோர்களில் 98 சதவீதம் பேர் போலீஸிலோ அல்லது அரசு அதிகாரிகளிடமோ புகார் செய்வதில்லை. இதன் மூலம் அவர்கள் கொடுமையை அனுபவித்தபடி வேறு வழி தெரியாமல் தங்கள் மனதுக்குள்ளேயே அழுகிறார்கள் என்பதை அறியலாம் எனவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
முதியோர்களைக் கொடுமைப்படுத்துவது 63 சதவீதம் அவர்களின் மருமகள் தான். அதே நேரம் 44 சதவீத மகன்களும் அவர்களைக் கொடுமைப் படுத்துகின்றனர்.நாட்டின் தலைநகரான புதுதில்லியில் அனைத்து முதியவர்களும் தங்கள் மருமகளின் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வின் போது தெரிவித்தனர். அதாவது 100 சதவீதம் பேர் தங்கள் மருமகள்களால் கொடுமைக்கு ஆளானதாகத் தெரிவித்துள்ளனர். கொடுமைக்கு ஆளாகும் முதியோர்களில் 52 சதவீதம் பேர் படிப்பறிவு இல்லாதவர்கள். 66 சதவீதம் பேர் பொருளாதார ரீதியாக தங்கள் குடும்பத்தினரைச் சார்ந்து வாழ்கிறார்கள். பெரும்பாலானோர் தங்கள் அன்றாட செயல்பாடுகளுக்கு மருமகள்களையே நம்பியுள்ளனர். 85 சதவீதம் பேர் மருத்துவச் செலவுகளுக்கு மற்றவர்களை எதிர்பார்த்து வாழ்கின்றனர்.
முதியோருக்கு எதிரான கொடுமை என்பது மனதைக் காயப்படுத்தும் விதமாகப் பேசுவது மட்டுமின்றி உடல் ரீதியாகக் காயப்படுத்துவதும் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் முதியோர்களை சமூக, பொருளாதார, உடல்நல ரீதியாகக் காப்பாற்றுவது அவசியம் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
ஹெல்பேஜ் இந்தியா, முதியோர் நலனுக்காக கடந்த 30 ஆண்டுகளாக செயல்படும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும்."
இது 16.06.2011 அன்றைய தினமணி நாளேட்டில் வந்த செய்தி.

வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்திரவதை

”...கோவை: வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்திரவதை. 


திருமணம்
கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த சந்தியாவிற்கும், செளரிபாளையத்தைச் சேர்ந்த பாஸ்கரனுக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பாஸ்கரன் செளரிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டராகப் பணியாற்றி வருகிறார்.
திருமணத்தின் போதே 25 பவுன் நகை, ரூ. 5 லட்சம் ரொக்கம் மற்றும் மணமகனுக்கு பைக் ஆகியன சந்தியாவின் வீட்டார் சார்பில் கொடுக்கப்பட்டது.
கருவை அழி
திருமணம் ஆன சில நாட்களிலேயே பாஸ்கரனின் தாயும், தந்தையும் மருமகள் சந்தியாவை கூடுதல் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்தனர். இந்நிலையில் சந்தியா கர்ப்பம் தரித்தார்.
அவரது கர்ப்பத்தில் இருப்பது பெண் குழந்தை தான் என்பதை அறிந்து கொண்ட இருவரும் கருவைக் கலைக்கச் சொல்லி தொடர்ந்து இம்சை செய்துள்ளனர். இதனால் கணவன் வீட்டைவிட்டு வெளியேறி தாய் வீட்டில் தஞ்சம் அடைந்தார் சந்தியா. அங்கேயே தங்கி பெண் குழந்தையை பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் கணவரோடு சேர்ந்து வாழ சந்தியா கூடுதலாக ரூ. 2 லட்சம் வரதட்சணை தரவேண்டும் என பாஸ்கரனின் வீட்டிலிருந்து தொடர்ந்து துன்புறுத்தல்கள் வந்து கொண்டிருந்ததால், சந்தியா கோவை மாநகர போலீசில் புகார் செய்தார்...”.

மருமகள்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொடுமைப் படுத்தப்படுவதற்கு இது ஒரு வகை மாதிரிதான்.

மேலே கண்ட எதிரெதிரான இரு செய்திகள் நமக்கு உணர்த்துவது என்ன? இவை பற்றி பரிசீலிக்கின்ற அதே வேளையில் இவைகளைக் களைய முடியுமா? என்பதையும் பரிசீலிக்க வேண்டும். 

மருமகள்கள் மீது.... 

மாமியார் கொடுமை தாங்காமல் மருமகள் தற்கொலை, வரதட்சணை கேட்டு துன்புறுத்தப்பட்டதால் மனமுடைந்த இளம் பெண் தற்கொலை, வரதட்சணை கேட்டு மருமகள் சித்திர வதை-தீயிட்டுக் கொலை, மருமகளிடம் மாமனார் சிலுமிசம், நாத்தனார் கொடுமை என புகுந்தவீட்டில் மருமகள்கள் மீது ஏவப்படும் வன் கொடுமைகளை பட்டியலிட்டு மாளாது.

இத்தகைய துன்புறுத்தல்களின் போது கட்டிய மனைவியை காக்கின்ற கணவன்மார்கள் எத்தனை பேர்?  இங்கே மருமகள்களை துன்புறுத்துகிற நிகழ்வுகள் பெரும்பாலும் பொருள் மற்றும் பணம் சார்ந்ததாகவே இருக்கின்றன. எவ்வளவுக்கு எவ்வளவு நகையும் பணமும் பொருளும் (சீர் - செனத்தை) கொண்டு வருகிறார்களோ அதைப்பொருத்தே சித்திரவதைகள் தீர்மானிக்கப் படுகின்றன.

நகை-பணம்-பொருள் இவற்றில் திருப்தியடைந்தாலும் மருமகள் பெண்குழந்தை ஒன்றைப் பெற்றுவிட்டால் அவள் சுடுகாடு செல்லும் வரை கொத்திக் குதறி விடுகிறார்கள். குழந்தைப்பேரில் ஆணா பெண்ணா என தீர்மானிப்பது ஆண்களின் விந்தணுவில் உள்ள செயல்பாடே காரணம் என மருத்துவ உலகம் திரும்பத் திரும்பச் சொன்னாலும் இவர்களின் காதுகளை அது எட்டுவதில்லை. ஆண் வாரிசுக்காக கட்டிய மனைவியை துரத்திவிட்டு மற்றொருத்திய கூட்டிக் கொள்ளும் கணவன்மார்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். இதற்கு தூபம் போட்டு உசுப்பேத்துபவர்கள் மாமியாரும் நாத்தனார்களும்தானே.

சமைக்கத் தெரியாததால் சில சமயம் சிறிதளவு பொருள் வீணாகிவிட்டால் அதற்காக மருமகளைக் கடித்துக் குதறி அமர்க்களப் படுத்திவிடுவார்கள். மருமகள்கள் எப்படி நடத்தப் படுகிறார்கள் என்பதற்கு மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம் என்கிற பழமொழி ஒன்று போதுமே. இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும்?   

வேலைக்குப் போகும் மருமகள் என்றால் சம்பளப் பணத்தை கணவனிடமோ அல்லது மாமியாரிடமோ கொடுத்துவிட வேண்டும். மறுக்கின்ற மருமகள்கள் வாழ்நாள் முழுக்க தூக்கத்தை தொலைக்க வேண்டும். மன உலைச்சலில் தூக்கம் மட்டும் எப்படி வரும்?

அங்கே உட்காராதே-இங்கே உட்காரதே, அங்க என்ன வேடிக்கை-இங்க என்ன வேடிக்கை, அங்க என்ன பேச்சு, யாருகிட்ட போன்ல பேசின, தலை வாருவதற்கு இதுவா இடம்? இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டு மிகச்சாதாரண உரிமைகளைக்கூட தரமறுப்பது புகுந்த வீடுகளில் அன்றாடம் நடந்து கொண்டுதானே இருக்கிறது. மொத்தத்தில் மருமகள்கள் சூழ்நிலைக் கைதிகளாகவே வாழ்கிறார்கள்.
மருமகள் என்பவள் புதிதாக அமர்த்தப்படும் ஒரு வைலைக்காரி. ஊதியம் இல்லாத இந்த வேலைக்கு இலட்சக் கணக்கில் இலஞ்சம் கொடுக்க வேண்டும். இந்த இலஞ்சத்தில் நகை, பணம், பொருள், சொத்து-பத்து, சீர்-செனத்தை எல்லாம் அடங்கும். பெண் மற்றும் ஆண் இருவரின் படிப்புக்கு ஏற்ப இலஞ்சத் தொகை மாறுடும்.இலட்சக் கணக்கில் அள்ளித் தரும் பன்னாட்டுக் கம்பெனிகள்கூட 'கேம்பஸ் இன்டர்வியூவ்' மூலம் ஒருசில மணி நேரத்தில் தங்களுக்குத் தேவையான வேலைக்காரர்களை கல்லூரிகளுக்குச் சென்றே தேர்வு செய்துவிடுகிறார்கள்.ஆனால் ஊதியமே இல்லாத மருமகள் வேலைக்கு ஆள் எடுக்க மிக நீண்ட நெடிய சிக்கலான 'புராசஸ்' கையாளப்படுகிறது. இங்கே ஆள் எடுக்க குறைந்தபட்சம் சில மாதங்களாவது தேவைப்படும். ஆண்டுக் கணக்கில் தேடுவோரும் உண்டு. பணியில் அமர்த்துவதற்கு முன்பு ஐயரின் 'கன்கரன்ஸ்' கட்டாயம் தேவை. இல்லை என்றால் 'அப்பாய்ன்ட்மெண்ட் ஆர்டர்' கிடைக்காது.

வேலைக்காரிகள்கூட உடல் நிலை சரியில்லை என்றால் ஒன்றிரண்டு நாட்களுக்கு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். வேலை பிடிக்கவில்லை என்றால்  வேலையை விட்டு நின்று விடலாம்.ஆனால் மருமகள் என்கிற வேலைக்காரிக்கு விடுப்பு என்பதே வாழ் நாளிலேயே கிடையாது. வேலையை விட்டு நிற்கவும் முடியாது. இது இறக்கும் வரை 'ரிட்டையர்மெண்ட்டே' இல்லாத நிரந்தர வேலை.

மருமகள் என்கிற வேலைக்காரிக்கு உடல் நிலை மிகவும் மோசமாகி மருத்துவம் பார்க்கும் நிலைக்கு ஆளாகி, பிறர் உதவி கண்டிப்பாக தேவைப்படும் என்றால் அவளது தாய்வீட்டுக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்படும். தாய்வீட்டார் வந்து அழைத்துச் சென்று மருத்துவம் பார்த்து சரிசெய்து குணமான பிறகு மீண்டும் புகுந்த வீட்டில் விட்டுவிட்டு வரவேண்டும். மருத்துவ செலவுக்கு எம்ளாயரிடமிருந்து 'ரீஇம்ர்ஸ்மெண்ட்' எல்லாம் கிடைக்காது.  'டிலாவலிங் அலவன்சும்' கிடையாது. இதெல்லாம் எழுதப்படாத 'செர்வீஸ் ரூல்ஸ்'. குணப்படுத்த முடியாது, இனி நிரந்தர சீக்காளி என்றால் 'வித்தவுட் நோட்டீஸ் டிஸ்மிஸ்தான்'.

இப்படி வேலையை பறிகொடுத்துவிட்டு நடுத் தெருவில் நிற்கும் மருமகள்களை மீண்டும் அதே வேலையில் அமர்த்துவதற்கு உறவினர்கள் நடத்தும் கட்டப் பஞசாயத்துக்கள் ஒருபுறம். பஞ்சாயத்து 'ஒர்க்அவுட்' ஆகவில்லை என்றால் காவல் நிலையங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் மனு மேல் மனு போட்டு அல்லாடும் அவலம் மறுபுறம். இவற்றையெல்லாம் 'எம்ளாயர்கள்' பொருட்படுத்துவதே கிடையாது. வெகு விரைவிலேயே வேறு ஒரு வேலைக்காரியை மருமகளாக வேலைக்கு அமர்த்திக் கொள்வார்கள். ஆனால் வேலையிலிருந்து விரட்டப்பட்ட மருமகளுக்கு வேறு வேலை கிடைத்து விடுமா என்ன? கையறு நிலையில் அவள் என்ன செய்வாள்? அதுவும் பிள்ளை குட்டிகளோடு விரட்டப் பட்டு விட்டால் குளமோ-குட்டையோ, ஆறோ-ஏரியோ, பாலிடாலோ-பாயிசனோ, தாம்புக் கயிரோ-கெரெசினோதான் இவளை அணைத்துக் கொள்ளும்.

போதும். இதோடு நிறுத்திக் கொள்கிறேன். இதற்கு மேலேயும் எமுத வேண்டுமா என்ன? 

இப்படி நசுக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு, உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்ட மருமகள்களா முதியோர்களை துன்புறுத்துகிறார்கள்?
...................தொடரும்

2 comments:

  1. தீர்ப்பு சொல்லிவிட்டீர்கள். மீதி பாதியை நான் இன்னும் வெளியிடவில்லையே!

    ReplyDelete